Wednesday, July 15, 2020

பொஞ்சாதி

ஆம்பளங்கறத் திமிருல 
ஆறடிக்கு வளந்திருக்கேன்,
வேலயத் தினங்கட்டிக்கிட்டு - நீ 
வேணாமுன்னு திரிஞ்சிருக்கேன்,
சங்கிலியொன்னுக் கேட்டுப்புட்டா  - சாக்குச்
சொல்லிச் சலிச்சிருக்கேன் 
நோவுல நீ விழுந்தப்போ - நான் 
நோவாம இருந்திருக்கேன் - நீ
கொழந்தையாலத் தவிக்கறப்ப - நான் 
கொரங்காட்டம் போட்டிருக்கேன்!

வேறோருத்தியா இருந்திருந்தா 
வெட்டிக்கிட்டுப் போயிருப்பா - என்
எகத்தாளம் மட்டுமில்ல 
எல்லாத்தையும் தொலச்சிருப்பேன்,
நீயாயிருக்கபோயிப் 
பொறுமையாத்தாம் போயிடற,
பொறுமையா நீ போறதால  - உன்னக்
கொறவா நெனக்கல புள்ள - நீ 
பெருமதான் சேத்துப்புட்ட - நம்மளப்
பெத்துப்போட்டச் சாமிகளுக்கு!

ஆவேசமா வந்து நின்னு 
ஆசையாச் சிரிச்சுடற,
சாய்ச்சுப்புட ஓடி வந்துச் 
சாந்தமாப் பேசிடுற,
இதமாப் பேசிக்கிட்டே 
இடியொன்ன எறக்கிடுற,
சமாதானமாப் போயிட்டுச் 
சண்டைக்கு நின்னுடுற - நான்
செவுடில்லைனுத் தெரிஞ்சிருந்தும் 
சங்கெடுத்து ஊதிடற,
சத்தியமாச் சொல்றம்புள்ள
பத்து வருசத்துக்கப்புறமும் - உன்னக்
கணக்குப் பண்ணத் 
தெரியவே இல்ல!

கோவங்காட்டி முடிஞ்சப்புறம்
கோணலெல்லாங் கொறஞ்சப்புறம்
வலியோட வாழ்ந்தாத்தான் 
வாழ்க்க ருசிக்குமுன்னியே,
அழுகாச்சிய நிறுத்தாம 
ஆசை அம்புட்டுன்னியே, 
கோவத்தெல்லாந் தூரவச்சு
கோலமெல்லாம் போட்டுவச்சு
சொல்றாப்ள சொல்லிருந்தா 
சொக்கியில்ல போயிருப்பேன்,
சொன்னதெல்லாஞ் செஞ்சிருப்பேன்,
தல மேல தூக்கிவெச்சுத்
தக திமி தா ஆடிருப்பேன்!

படிச்சுச் படிச்சுச் சொல்லிப்புட்டா 
பொறுப்பெனக்கு வந்துருமா? 
ஆதிக்கமாப் பேசிப்புட்டா 
அன்புனக்குக் கெடச்சுருமா? - அட 
ஆசவார்த்தச் சொல்லு புள்ள - நான் 
உன்னோட கையிக்குள்ள, 
ஆயிரந்தா இருந்தாலும் - நீதான் 
என் ராணி புள்ள,
பத்துப் புள்ளைங்க ஆனாலும்
பல சென்மம் போனாலும் 
உன்னவிட யாருமில்ல,
உசுருன்னத்  தேடும்புள்ள,
நெஞ்சுக்குள்ளக் கெடந்தாலும் - என் 
நேசமெல்லாம் நெசம்புள்ள,
கொஞ்சங் கடுநெஞ்சானதால - வெளிய 
காமிச்சுக்கத் தெரியவில்ல - ஓடி
வந்து கட்டிக்க புள்ள - என்
கண்ணுக்குள்ள கலங்குதுல்ல!

குறிப்பு: இது எம் பொஞ்சாதிக்குப் பத்தாம் வருசக் கலியாண நாள் பரிசு.

Monday, May 25, 2020

இயற்கை

பரந்திருக்கும் உலகு
பாசாங்காய் நிலவு,
வலம்புரிச் சங்கு
வானிருக்கும் கங்கு,

அக்கினியின் புதிர்
ஆதவனின் கதிர்,
வெற்றிடத்தின் குணம்
வேர்களின் மணம்,

நிலத்தின் பருவம்
நீரின் கருவம்,
கல்லின் உருவம்
காற்றின் அருவம்,

உடும்பதனின் தேகம்
ஊரறியாக் காகம்,
பகலிரவு ஆட்டம்
பாம்பதனின் பாட்டம்,

தொட்டால் சிணுங்கியும்
தோளாடும் குருவியும்,
மண்புழுவின் உணவும்
மானிடரின் கனவும்,

புழுவும் பூச்சியும்
பூதங்களின் சாட்சியும்,
புலியும் பூனையும்
அவ்விரண்டின் மொழியும்,

சிலிர்த்துக்கொண்ட இலையும்
சிலந்தியிட்ட வலையும்,
வெப்பமும் குளிர்ச்சியும்
குளிரை வென்ற  குரங்கும்
குரங்கதுவின் சிரிப்பும் - குன்றாத
கடலும் வியர்வையும் கண்ணீரும்,
இம்மூன்றின் சுவையும்,

தின்றொழிக்கும் கறையானும்
கொன்றொழிக்கும் கொரோனாவும்
கொரோனாவைப் படைத்த மனிதனும்,
மனிதனாகிய  நீயும்
இன்னொருவன் நானும்
இயற்கையே!

Tuesday, February 18, 2020

கலங்கரை விளக்கம்

இன்றல்ல நேற்றல்ல
வருடங்கள் கணக்கல்ல,
தங்கத்தால் வந்ததல்ல
தழுவிக்கொண்டே நின்றதல்ல,
சூதுகளால் சுழன்றதல்ல
சூத்திரத்தால் பணிவதல்ல,
தர்க்கத்தின் தலையல்ல
தரத்திற்கு நிகரல்ல,
தவமாகிப்போன அது - உன்
அன்பன்றி வேறல்ல,
தவமிருந்து பெற்றோமே
தவமிருந்து பெற்றோமே,
தவமிருந்து பெற்றதனால்  - உன்
அன்பு வெறும் கடலல்ல
அது எங்கள்
கலங்கரை விளக்கம்!

குறிப்பு: வேலுமணி மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.