Saturday, January 16, 2016

சீறுங்கள் காளைகளே

சீறுங்கள் காளைகளே,
சீவிய கொம்பன்களே!

தாய்த்தமிழ் நாட்டினிலே,
என் வாழ்வுக்குப் பங்கமில்லே,
எல்லையின்றி அத்து மீறும் இரட்டைத்தன ஆர்வலரே,
என்னைப் புசிப்பதை நொடி மறந்தென் - குரல்
கொஞ்சம் கேளுங்களேன்
என்று.. சீறுங்கள்  காளைகளே!

யானை குதிரை கழுதை மேலில்லை அக்கறை,
என்னினத்திற்கு மட்டும் எதற்கிந்தப் பரிந்துரை?
என் சொந்தமவன் குத்தினாலும் கிழித்தாலும் காளையரை,
மறத்தமிழன் எனை மனத்தால் ஆளும் வரை,
அவன் பணி செய்தே கிடப்பேன் -
என்னினம் வீழும் வரை
என்று.. சீறுங்கள் காளைகளே!

வாடிவாசல் வழி திறந்து,
விருட்டென சீறிப்பாய்ந்து,
குளம்படிகள் ஆழமாய் பதிந்து,
மச்சக் காளைகளினுள் கலந்து,
திமில் தழுவும் முகங்கள் மறந்து,
கொம்பில் எவனும் சிக்காமல் வளைந்து,
சிமிட்டும் நேரம் முன்னேறிப்பறந்து,
அயர்வற்ற உணர்வுகள் வானுயர்ந்து,
வளர்த்த குடும்பத்தினுள் போய் அணைந்து,
சொந்த பந்தம் அகமகிழ்ந்து,
கண்டிருக்கும் கண் வியந்து,
ஆடிவருமிந்த ஏறைத் தழுவாமல் - இல்லையடா
பொங்கல் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

கோடி கோடியாய் பணம் இறைந்து,
கொத்தாக எங்களினம் மடிந்து,
அயலினம் என் மரபு நுழைந்து,
என் தமிழுக்குத் துரோகம் புரிந்து,
கனவு காணாதே - உனக்காவேன்
நான் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

வருடந்தோறும் சீராட்டிப் பாராட்டி,
பசும்புல் பருத்தித் துவரைப் புகட்டி,
காலாண்டில் சத்துருண்டை ஊட்டி,
அவன் பசித்து என் பசியாற்றி,
என்னுடல் நலம் பேணப் பதறிப் பிதற்றி,
ஊர் உறவு காணாது ஊண் உறக்கமின்றி,
என் திமில் அணைத்த அவன் வெற்றி,
அவன் முத்தமிட்ட என் நெற்றி,
சொல்லுமடா என்னை - எப்படி
வளர்த்தான் போற்றி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

அம்மா என்ற சொல்லை அடிமைச்சொல்லாக்கி,
நீ அம்மா என்றழைப்பதையும் அரசியலாக்கி,
கலைஞரும் கடை நிலையை காசாக்கி,
உரிமைகளை உளுத்த கட்டுமரமாக்கி,
கலகத்தையே கழகங்களின் கொள்கையாக்கி,
தேர்தலில் வன்புணர்ந்து நம்மை விலைமாதராக்கி,
பிணம் தின்னும் - அவல அரசியலை
எறியுங்கள் தூக்கி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

முந்தா நேற்றைய ஆலம்பாடியனும் காங்கேயனும்,
நேற்றைய புலிகுளத்தானும் உம்பளாச்சேரியனும் ,
இன்றைய பருகூரனும் மலையனும்,
நாளைய அடிமாட்டான் - என்ற
பெயர் பெற்றொழியாமிலிருக்க
என்னினமே தமிழா..
உணவில்லாமல் இறந்தாலும் இற,
உணர்வில்லாமல் இருப்பதை மற!
பொங்கல் வைத்தது விடு,
பொங்கி எழு!
போராட்ட குணம் தவிர,
போர்க்குணமும் கொள்!
என்று..
சீறுங்கள் காளைகளே,
துடி சீவிய கொம்பன்களே!