Monday, May 25, 2020

இயற்கை

பரந்திருக்கும் உலகு
பாசாங்காய் நிலவு,
வலம்புரிச் சங்கு
வானிருக்கும் கங்கு,

அக்கினியின் புதிர்
ஆதவனின் கதிர்,
வெற்றிடத்தின் குணம்
வேர்களின் மணம்,

நிலத்தின் பருவம்
நீரின் கருவம்,
கல்லின் உருவம்
காற்றின் அருவம்,

உடும்பதனின் தேகம்
ஊரறியாக் காகம்,
பகலிரவு ஆட்டம்
பாம்பதனின் பாட்டம்,

தொட்டால் சிணுங்கியும்
தோளாடும் குருவியும்,
மண்புழுவின் உணவும்
மானிடரின் கனவும்,

புழுவும் பூச்சியும்
பூதங்களின் சாட்சியும்,
புலியும் பூனையும்
அவ்விரண்டின் மொழியும்,

சிலிர்த்துக்கொண்ட இலையும்
சிலந்தியிட்ட வலையும்,
வெப்பமும் குளிர்ச்சியும்
குளிரை வென்ற  குரங்கும்
குரங்கதுவின் சிரிப்பும் - குன்றாத
கடலும் வியர்வையும் கண்ணீரும்,
இம்மூன்றின் சுவையும்,

தின்றொழிக்கும் கறையானும்
கொன்றொழிக்கும் கொரோனாவும்
கொரோனாவைப் படைத்த மனிதனும்,
மனிதனாகிய  நீயும்
இன்னொருவன் நானும்
இயற்கையே!

No comments: