Wednesday, July 15, 2020

பொஞ்சாதி

ஆம்பளங்கறத் திமிருல 
ஆறடிக்கு வளந்திருக்கேன்,
வேலயத் தினங்கட்டிக்கிட்டு - நீ 
வேணாமுன்னு திரிஞ்சிருக்கேன்,
சங்கிலியொன்னுக் கேட்டுப்புட்டா  - சாக்குச்
சொல்லிச் சலிச்சிருக்கேன் 
நோவுல நீ விழுந்தப்போ - நான் 
நோவாம இருந்திருக்கேன் - நீ
கொழந்தையாலத் தவிக்கறப்ப - நான் 
கொரங்காட்டம் போட்டிருக்கேன்!

வேறோருத்தியா இருந்திருந்தா 
வெட்டிக்கிட்டுப் போயிருப்பா - என்
எகத்தாளம் மட்டுமில்ல 
எல்லாத்தையும் தொலச்சிருப்பேன்,
நீயாயிருக்கபோயிப் 
பொறுமையாத்தாம் போயிடற,
பொறுமையா நீ போறதால  - உன்னக்
கொறவா நெனக்கல புள்ள - நீ 
பெருமதான் சேத்துப்புட்ட - நம்மளப்
பெத்துப்போட்டச் சாமிகளுக்கு!

ஆவேசமா வந்து நின்னு 
ஆசையாச் சிரிச்சுடற,
சாய்ச்சுப்புட ஓடி வந்துச் 
சாந்தமாப் பேசிடுற,
இதமாப் பேசிக்கிட்டே 
இடியொன்ன எறக்கிடுற,
சமாதானமாப் போயிட்டுச் 
சண்டைக்கு நின்னுடுற - நான்
செவுடில்லைனுத் தெரிஞ்சிருந்தும் 
சங்கெடுத்து ஊதிடற,
சத்தியமாச் சொல்றம்புள்ள
பத்து வருசத்துக்கப்புறமும் - உன்னக்
கணக்குப் பண்ணத் 
தெரியவே இல்ல!

கோவங்காட்டி முடிஞ்சப்புறம்
கோணலெல்லாங் கொறஞ்சப்புறம்
வலியோட வாழ்ந்தாத்தான் 
வாழ்க்க ருசிக்குமுன்னியே,
அழுகாச்சிய நிறுத்தாம 
ஆசை அம்புட்டுன்னியே, 
கோவத்தெல்லாந் தூரவச்சு
கோலமெல்லாம் போட்டுவச்சு
சொல்றாப்ள சொல்லிருந்தா 
சொக்கியில்ல போயிருப்பேன்,
சொன்னதெல்லாஞ் செஞ்சிருப்பேன்,
தல மேல தூக்கிவெச்சுத்
தக திமி தா ஆடிருப்பேன்!

படிச்சுச் படிச்சுச் சொல்லிப்புட்டா 
பொறுப்பெனக்கு வந்துருமா? 
ஆதிக்கமாப் பேசிப்புட்டா 
அன்புனக்குக் கெடச்சுருமா? - அட 
ஆசவார்த்தச் சொல்லு புள்ள - நான் 
உன்னோட கையிக்குள்ள, 
ஆயிரந்தா இருந்தாலும் - நீதான் 
என் ராணி புள்ள,
பத்துப் புள்ளைங்க ஆனாலும்
பல சென்மம் போனாலும் 
உன்னவிட யாருமில்ல,
உசுருன்னத்  தேடும்புள்ள,
நெஞ்சுக்குள்ளக் கெடந்தாலும் - என் 
நேசமெல்லாம் நெசம்புள்ள,
கொஞ்சங் கடுநெஞ்சானதால - வெளிய 
காமிச்சுக்கத் தெரியவில்ல - ஓடி
வந்து கட்டிக்க புள்ள - என்
கண்ணுக்குள்ள கலங்குதுல்ல!

குறிப்பு: இது எம் பொஞ்சாதிக்குப் பத்தாம் வருசக் கலியாண நாள் பரிசு.

No comments: