Monday, September 2, 2019

தொப்பை சாமி

"உ"
இதோ உன் சுழியைச்
சுழித்துவிட்டேன்,
வெற்றியின் குறுக்கே வரும்
தடைகளைக் கலையாதே,
என் வாழ்க்கைப் பயணத்தை
எளிதாக்காதே - என்
முயற்சிகள் அனைத்தையும்
வெற்றியாக்காதே,
என் விதியை
என்னிடமே விட்டுவிடு
மதி கொண்டதனிடம்
மோதிக்கொள்கிறேன்!

உன்னிடம் வேண்டுவதெல்லாம்...
உன் பானை வயிற்றை
என்னிரு கைகள் கோர்த்து
அணைக்க வேண்டும்,
உன் தொப்பையைக் குறைக்காமல்
அதற்கொரு வழியைச் சொல்!

உன் தும்பிக்கையில் என்
தலைதொட்டுப் பின் திருநீறிட்டு
உன் தோளில் அமர்த்திக்கொள்,
அனுமதி தேவையில்லை - என்
அம்மையப்பனைச் சுற்றி வா,
அப்படியே உன் ஞானத்தில்
பங்கொன்றைத் தந்துவிடு,
என்னுடைய ஞானத்தை
என்னிடமே விட்டுவிடு!

உன் உடைந்தக் கொம்பை
ஒட்டித் தருகிறேன்,
உன் இன்னொரு கொம்பை
எனக்குப் பரிசளித்துவிடு,
மூன்றாவது இதிகாசம்
எழுதவேண்டும்!

நீ பிறந்த நாளில் - என்னை
உன்  மடிமீது அமர்த்திக்கொள்,
என் பசியடங்கிய பின்தான்
உனக்குக் கொழுக்கட்டை,
நீ கரையும் நீரையெல்லாம்
தீர்த்தங்கள் ஆக்கிவிடு - உண்ட
கொழுக்கட்டைச் செரிக்க
அத்தீர்த்தத்தைப் பருகிக்கொள்கிறேன்!

மூஞ்சூறும் நீயும் நானும்
பிரபஞ்சங்களில் ஒளிந்து
கண்ணாமூச்சியாடுவோம் - பின்
சில கோள்களை வீசியெறிந்து - அதன்
திசை மாற்றுவோம்,
பூமியைச் சுற்றி
நிலவுகளைக் கட்டி வைப்போம்,
நம் உடலினில்
விண்மீன்களை ஒட்டி வைப்போம்,
விளையாடிக் களைத்தபின்
கட்டிக்கொண்டு உறங்குவோம் - உன்
பெருங்காதை என் தலையணையாக்கு,
தேவ ரகசியங்கள்
எனைத் தாண்டியுன்
செவி சேரட்டும்!

நீயெனக்குச் சிவனளித்த வரம்
என்னுடனே நீயிருந்தால் பலம்,
வா, நம் நட்பைப்
படம்  பிடிப்போம் - பின்
என் மோதிரத்தில் அமர்ந்துகொள்,
தெய்வம் என்னுடன்
நேரடித் தொடர்பிலிருப்பதை
அனைவரும் அறியட்டும்!

நம் நட்பைக் கண்டவர்
பொறாமை கொள்வர்,
உனை மறந்து புதுச்
சட்டங்கள் இயற்றுவர் - உன்
பெயரால் உயிர் பறிப்பர்
தவறாமல் தலை எடுப்பர் - அட
வினைத் தீர்ப்பவன்
நீயிருக்கப் பயமென்ன,
நான் தலையிழந்தால் - உன்
தலை தந்து
என்னுயிர்க் காப்பாய்
எனும் நம்பிக்கையில்
உரக்கச் சொல்கிறேன்
"பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா"!

No comments: