Tuesday, October 1, 2019

அகரன் காடு

அழகிய காடுதான் அது
விசித்திரக் குணங்கள் கொண்டது,
நிறங்களும் அவ்வாறே,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாத புதிரது  - ஆனாலும்
அழகிய காடுதான் அது
அரசன் அவனென்பதால்!

இங்கு
மரங்களில் மண்வாசம் வீசும்
மீன்கள் விளையும் - உலுக்கினால்
கேள்விகள் உதிரும் - விதைத்தவுடன்
கனி கிடைக்கும்,
செடிகள் முட்டையிடும் ,
முட்கள் கதை சொல்லும்,
மூன்று கால்களுடன்
முயலே வேட்டையாடும்!

தவறுகள் தெரிந்தே செய்யப்படும்,
திருத்தங்களுக்கு நேரமில்லை,
தூங்கி எழுந்தாலே
அழுக்குகள் நீங்கும் - தூவானம்
தூய அன்பைக் கொட்டும்,
தூரத்து இடி முழக்கம்
துள்ளிக் கழுத்தைக் கட்டும்!

மீன்களெல்லாம்  - அவன்
இலட்சினையைக் கொண்டிருக்கும்,
கரடிகள் கதை சொல்லும்
கட்டியும் உருளும்.
மேகங்களைத் தின்னலாம்,
மூக்கின் பொருத்தம் பார்த்தே
திருமணங்கள் நடைபெறும்,
வாந்தி வயிற்றுக்குள்ளும்
எடுக்கப்படும்,
சிரிப்புகள் சினமாகும்
சினம் நகைப்பூட்டும்,
புலி புல் மேயும்
புற்கள் புலவு உண்ணும்,
பறக்கப் பழகலாம் - ஆனால்
புசிப்பது பாவச்செயல்!

இக்காட்டில்
கூகுளுக்கும் பசி எடுக்கும் - அது
செய்தியைத்தான் தின்னும்,
ரசம் கடலாகும்
கடல் கடுகாகும்,
அம்மனங்கள் அசிங்கமில்லை
ஆடையே அவமானம்,
ஆருடங்கள் பலிப்பதில்லை
ஆசைகள் மட்டுமே,
அறிமுகங்கள் வெட்கத்தில் முடியும்,
நடிகர்கள் இல்லாமலே
நாடகங்கள் அரங்கேறும்,
அரங்கங்கள் இல்லாமலே
அம்புலிமாமா கதை சொல்லும்!

சாதிகள் இல்லை
சாத்திரங்கள் இல்லை
கடவுளும் இல்லை
கடமையும் இல்லை - ஆனால்
சாதனைகளனைத்தும் சாத்தியமே,
பெண்ணென்று யாருமில்லை
ஆணென்றும் எவருமில்லை
அன்பே அடிப்படைத் தகுதி,
அறம் என்பது
அறியப்பட வேண்டிய ஒன்று!

விசித்திரக் குணங்கள் கொண்டது
அழகிய வனமது,
புதிரூற்றி வளர்க்கப்பட்டது,
புரியாவிட்டால் பிழையில்லை
புரிந்துவிட்டால் - உன்
நிலை நிலையில்லை - இது
அகரனின் காடு
எல்லையில்லா நாடு!

குறிப்பு: அகரன் - என் மகன், முதல்வன்.

No comments: