Wednesday, March 13, 2019

கனவும் நினைவும்

தமையனவன் தனித்திருந்த
தடையங்கள் தெரிந்தவுடன்,
வனங்களதன் சங்கமத்தில்
புவிநீரைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்த
வெண்மேகக் கூட்டமொன்று - இரு
மனங்களதன் சங்கமத்தில்,
உயிர் நீரைத்தானுறிஞ்சிப்
புடைத்திட்ட வயிற்றினுள்ளே
நிலைகொண்டது கருவாக!
இரண்டாம் முறை தந்தையென்றக்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
மாலையிட்ட மனையாளின்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கர்வமதில்
மறுகர விரல் சொடுக்கியதில்
இடிகளும்தான் சிதறியதே.
இடி சிதறிய ஓசையது
இசையாகி அடங்கும் முன்னே,
வெண்மேகம் பொழிந்திட்ட
மழைபோலப் பிறந்தவனை
என் அப்பன் குமரேசன்
பூப்போல ஏந்தினானே!
என்கின்ற இக்கனவு 
நினைவாகக் கூடாதா?

பலர் மனதிலவன் வாழ்ந்திருந்தத்
தடையங்கள் தெரிந்தவுடன்,
கடுங்குனங்களதன் சங்கமத்தில்
நச்சதனைத் தினம் பருகி,
அனுதினமும் வளர்ந்துவந்தக்
கருமேகக் கூட்டமொன்று - பல
மனங்கள் மகிழ்ந்திருந்த - என்
மனையதனைச் சூழ்ந்துகொண்டு
என்னப்பனுயிர்ப் பறித்திடவே
நிலைகொண்டது புற்றாக!
வேதனையின் இமயத்தில்
கிரீடத்தைச் சூடிக்கொண்டு,
பெற்றெடுத்தத் தந்தையவன்
வலக்கர விரல் கோர்த்திருந்தேன்,
நிலை கொள்ளாக் கருமமது - அவன்
உயிரறுக்கத் தொடங்கியதில்
இடிகளும்தான் இறங்கியதே,
இடியிறங்கிய மனமதுவும்
இயல்புக்குத் திரும்பும் முன்,
கருமேகம் பொழிந்திட்ட
அமிலத்தின் மழையதுவோ
எங்களுயிர்த்  துளைத்ததுவே,
பொழிந்திட்ட அமிலத்தின்
அசுரவலி உரைக்காமல்
என் அப்பன் குமரேசன்
நிரந்தரமாய் உறங்கினானே!
என்கின்ற இந்நினைவு 
கனவாகிப் போகாதா?

குறிப்பு: என் தந்தை இயற்கை எய்தி ஒரு வருடம் கழிந்தது.

No comments: