Thursday, January 4, 2018

முன்னாள் காதலி

நானறியா நேரத்தில்
பின்னிருந்துக் கட்டியென்னைக்
களவாடும் பொழுதினிலே - தொலைந்திட்ட
உன் அச்சம்!
இல்லையென நானுரைத்தும்
உண்டென்று வாதிட்டு
மஞ்சத்தில் நிகழ்த்திவிட்டு - மன்றாடிய
உன் ம(கு)டம்!
சுற்றம் பல சூழ்ந்திருந்தும்
சற்றும் அதை நோக்காமல்
இதழுக்குள்  இதழ் புதைத்து - அகதியான
உன் நாணம்!
பல பேரின் பந்தம் நீ
இருட்டினில் என் சொந்தம் நீ,
கணவனில்லை என்றாலும் - எனைக்
கட்டித் தழுவுகையில் - பறந்தோடிய
உன் பயிர்ப்பு!

இந்நாற்குணத்தின் லட்சணத்தில்
பருவத்தின் நாள் முதலே - மயங்கித்தான்
போயிருந்தேன்,
நிறங்களுக்கும் அடையாளம்  - உண்டென்று
உணர்ந்திருந்தேன்!
எண்ணியவை முடித்துவிட்டு
உன்னிடம் நான் கலக்கையிலே
எண்ணாததை முடித்துவிடும் - கனவுலகில்
வாழ்ந்திருந்தேன்!

இங்கிதமே தெரியாமல்
மோகத்தை நீ வேண்டுகையில்
அலுவலையும் பாராமல்
நள்ளிரவின் துணையின்றி - உன்
இச்சை தீர்த்தேனே!
பெற்றோரின் சொல் மறுத்து
கல்வியையும் காணாமல்
காதல் மட்டும் குறியாக்கி
உனைச் சேரும் நோக்குடனே - பேதலித்து
அலைந்தேனே!

என்ன குற்றம் நானிழைத்தேன் - எனை
நீயும் விட்டுச் சென்றாய்?
வேண்டியுனை நான் அழைத்தும் - செவி
சாய்க்க மறுக்கின்றாய்,
கோடை மழை ஆனாயே - குறிஞ்சிப்
பூ ஆவாயோ?

என் அலுவல் நேசித்து - உன்
உடைமை மறந்தேனா?
இரண்டாவது மணம் புரிந்து - உன்
உரிமை மறுத்தேனா?
என்ன குற்றம் நானிழைத்தேன் - என்
விழி மோதி உரைத்துவிடு - என்
புத்திக்கு உணர்த்திவிடு!

என் தந்தையுடன் என் தாயும்
என் தங்கையுடன் என் சேயும்
மனையாளும் அவள் கருவும் - எனச்
சொந்தங்கள் பலவிருந்தும்
நீயின்றி உலகில்லை - எனைக்,
கனவுலகில் இருத்திவிட்டுக்
கனவாகிப் போனாயே!
உனை நினைத்து - என்
விழிகள் கோடை மழைக்
கொட்டுதடி,
என் கண்ணீரின் கொள்ளளவு - கொஞ்சம்
கரைந்துதான் போனதடி,
நீயில்லா விடியல்கள்
கருப்பு வெள்ளையானதடி!

எனக்கிருப்பது ஒரு மெய்யே - அது
பொய்யாகிப் போகும்முன்
என்னிடமே திரும்பிவிடு!
உனக்கென்றொரு விதி செய்தே  - அதைத்
தவறாமல் காத்திடுவேன்
என்னனுமதி கேளாமல்
உன்னுரிமை கொண்டாடு!
உன்னுள் எனை மூழ்கடித்து  - உன்
வஞ்சத்தைத் தீர்த்துவிடு!
என் உயரம் என் துயரம்
என் கர்வம் என் செல்வம்
என் சருமம் என் கருமம்
என் காயம் அதன் வலிகள்
அத்தனையும் மறக்கச்செய்
கட்டிலிலே யுத்தம் செய் - கலவி
கொண்டெனைச் சுத்தம் செய்!

என் மனையாள் யாதுரைப்பாள்
என்றெண்ணித் தயங்காதே
என் நலனைத் தினம் விரும்பும் - அவள்
இக்கால நளாயினியே!
ஓருடலாய் ஒருயிராய்
இச்சுவர்க்க வாழ்வதனை
நாமிருவர் வாழ்ந்திடவே
இமை மூடாத் தவமதனைப் - பல
காலம் புரிகின்றேன்!

மயக்கும் மஞ்சள் நிலவொளியில்  - தினம்
ஆரத்தழுவிக் கலந்துவிடு,
தினமொருமுறைக் கருவுற்று - எனக்குப்
புத்துயிரை அளித்துவிடு,
உன்னுறவைக் கொண்டாட
என்னாயுள் கூட்டியொரு
வரமொன்றைக் கொடுத்துவிடு
எனதாருயிர்
நித்திரா தேவியே!

No comments: