Thursday, August 14, 2025

கந்தசாமி

நிமிர்ந்த நடை நடந்து
நிற்காமல் உழைத்திடுவான்,
நாமறிந்த செய்திகள் - இவன் 
செவி சென்று வந்தவையே,
கடமையைக் கருத்தாகச் 
செய்திடுவான் - பிணியைக் 
கண் விழித்து விரட்டிடுவான்!


அவதிப் படுவோரின்
ஆபத்பாந்தவன்,
சேகுவாராவின் சகோதரன்,
பெரியாரின் பேரன்,
பகுத்தறிவைப் பேசிவிட்டுப் 
பசப்புகளை உடைத்திடுவான்,
சிகிச்சையென்று வந்துவிட்டால்
சிரத்தையோடு செய்திடுவான்,
சமூக நீதியின் சத்தம் - அவன் 
சபை எங்கும் ஒலித்திருக்கும் - ஆம்
அறுவை சிகிச்சையில் - அவனுக்கு
அனைவரும் சமமே!

அவன் முகம் கண்டவுடன்   
கவலைகள் கலைந்தோடும்,
உறுதியான கை பட்டு - உன் 
உள்ளுறுப்பு உறுதி பெறும்,
ஆரோக்கியம் மட்டுமல்ல
அறமும் பழகிடுவான்,
மருத்துவத்தால் மட்டுமல்ல 
மதியாலும் விதி செய்வான்!

நரிகள் ஆடும் ஆட்டம் - அவன்
நாடியிலே ஒட்டவில்லை,
கோடிட்டு வாழ்பவன்
கோடிகளுக்கு ஆசையில்லை - அவன் 
அன்புக்கு அளவுண்டு - ஆனால்
அக்கறைக்கு அளவே இல்லை,
பிணியோடு வந்தோரின் 
பிறவிதனைப் பேணிக் காக்கப்  
பிறப்பெடுத்து வந்த சாமி,

எங்கள் 
கந்தசாமி!