Saturday, June 2, 2018

முதல் சுற்று

குறிப்பு: மகனின் கோடை கால நீச்சல் பயிற்சி இன்று நிறைவடைந்தது, அதைப்பற்றி  சில வரிகள். பயிற்சியாளர்: நவநீதன்.

நவநீதன் வழி எடுத்து
ஆதவனின் ஒளி பிடித்து - ஆதி
அந்தம் தனை மறந்து
சுவாசத்தைச் சிறையிட்டு
நீரினிலே கற்ற கலை!

அச்சமில்லா ஒரு சிறுவன்,
அதைக்கொண்ட இன்னொருவன்,
அழுகையுடன் மற்றொருவன்,
அக்கறையில் சாடும் சிலர்,
கரைதனிலே ஓடும் சிலர்
என்றோடிய காலமது!

ஈரைந்து மாதங்கள்
தவமிருந்து பெற்ற கரு,
வீணாகிப் போகாமல்
மீனாகிப் போனதொரு
அதிசயத்தைக் காணக் காணத்
தெவிட்டாமல் மனதிலொரு
கர்வத்தைச் சூடிக்கொண்டப்
பெற்றவரோ ஐந்தாறு!

மாரியுடன் முடிந்திட்ட
சித்திரையின் வெயிலோடு,
தடதடவென ஓடிவிட்ட
பயிற்சியது முடிந்தாலும்,
நீரினுள்ளே கற்றறிந்த
நம் முயற்சிக்கிது முற்றல்ல!

தினமொருமுறை முழுகிடுவோம்,
நீரினிலே கலந்திடுவோம்,
உயிர் நினைப்பு வருகையிலே
உச்சிதனை  அடைந்திடுவோம்,
அகரத்தில் நின்றுகொண்டு
வெற்றிதனைச் சுவாசிப்போம்,
நம் முயற்சிக்கிது முற்றல்ல,
நம் சாதனைகளின்
முதல் சுற்று!

No comments: