Tuesday, February 18, 2020

கலங்கரை விளக்கம்

இன்றல்ல நேற்றல்ல
வருடங்கள் கணக்கல்ல,
தங்கத்தால் வந்ததல்ல
தழுவிக்கொண்டே நின்றதல்ல,
சூதுகளால் சுழன்றதல்ல
சூத்திரத்தால் பணிவதல்ல,
தர்க்கத்தின் தலையல்ல
தரத்திற்கு நிகரல்ல,
தவமாகிப்போன அது - உன்
அன்பன்றி வேறல்ல,
தவமிருந்து பெற்றோமே
தவமிருந்து பெற்றோமே,
தவமிருந்து பெற்றதனால்  - உன்
அன்பு வெறும் கடலல்ல
அது எங்கள்
கலங்கரை விளக்கம்!

குறிப்பு: வேலுமணி மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Saturday, June 2, 2018

முதல் சுற்று

குறிப்பு: மகனின் கோடை கால நீச்சல் பயிற்சி இன்று நிறைவடைந்தது, அதைப்பற்றி  சில வரிகள். பயிற்சியாளர்: நவநீதன்.

நவநீதன் வழி எடுத்து
ஆதவனின் ஒளி பிடித்து - ஆதி
அந்தம் தனை மறந்து
சுவாசத்தைச் சிறையிட்டு
நீரினிலே கற்ற கலை!

அச்சமில்லா ஒரு சிறுவன்,
அதைக்கொண்ட இன்னொருவன்,
அழுகையுடன் மற்றொருவன்,
அக்கறையில் சாடும் சிலர்,
கரைதனிலே ஓடும் சிலர்
என்றோடிய காலமது!

ஈரைந்து மாதங்கள்
தவமிருந்து பெற்ற கரு,
வீணாகிப் போகாமல்
மீனாகிப் போனதொரு
அதிசயத்தைக் காணக் காணத்
தெவிட்டாமல் மனதிலொரு
கர்வத்தைச் சூடிக்கொண்டப்
பெற்றவரோ ஐந்தாறு!

மாரியுடன் முடிந்திட்ட
சித்திரையின் வெயிலோடு,
தடதடவென ஓடிவிட்ட
பயிற்சியது முடிந்தாலும்,
நீரினுள்ளே கற்றறிந்த
நம் முயற்சிக்கிது முற்றல்ல!

தினமொருமுறை முழுகிடுவோம்,
நீரினிலே கலந்திடுவோம்,
உயிர் நினைப்பு வருகையிலே
உச்சிதனை  அடைந்திடுவோம்,
அகரத்தில் நின்றுகொண்டு
வெற்றிதனைச் சுவாசிப்போம்,
நம் முயற்சிக்கிது முற்றல்ல,
நம் சாதனைகளின்
முதல் சுற்று!

Wednesday, March 22, 2017

குரு வாழ்த்து

ஐம்பதாம் மேடை கண்ட, பலப்பல திறமைகள் கொண்ட எங்கள் சிலம்பக்கலை குரு தொல்காப்பியன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

சிலம்பக்கலையின் உருவே, 
தொல்கலையின்  கருவே,
தொல்காப்பியனென்ற  குருவே!

முன் சுற்றில் முன்னேறி, 
பின் சுற்றில் நிலைமாறி!

இரண்டானடியில் நின்று மடங்கி,
உடானில் சட்டென்று நெருங்கி!

சறுக்கியில் சறுக்காமல்,
கிரிக்கியில் கிறங்காமல்!

பகலில் விட்டக்  குத்தில்,
தடையை விட்டுச் சுற்றில்!

தட்டி வந்து நீயடித்தப் பல்டி,
அடிப்  பிடி வரிசைக் கட்டி,
தலைச் சுற்றிச் சாதனைகள் கொட்டி,
இவ்வைம்பதாம் மேடையைத் தட்டி,
வெற்றியுனை அணைக்கும் கட்டி!


குறிப்பு: உடான், அடி பிடி குத்து வரிசை, இரண்டானடி, பல்டி, கிரிக்கி, சறுக்கி, முன் பின் சுற்று, பகல், தலைச்சுற்று, தட்டி வருதல் இவையனைத்தும் சிலம்பக்கலையின் நிலைப்பாடுகள்.

Saturday, January 16, 2016

சீறுங்கள் காளைகளே

சீறுங்கள் காளைகளே,
சீவிய கொம்பன்களே!

தாய்த்தமிழ் நாட்டினிலே,
என் வாழ்வுக்குப் பங்கமில்லே,
எல்லையின்றி அத்து மீறும் இரட்டைத்தன ஆர்வலரே,
என்னைப் புசிப்பதை நொடி மறந்தென் - குரல்
கொஞ்சம் கேளுங்களேன்
என்று.. சீறுங்கள்  காளைகளே!

யானை குதிரை கழுதை மேலில்லை அக்கறை,
என்னினத்திற்கு மட்டும் எதற்கிந்தப் பரிந்துரை?
என் சொந்தமவன் குத்தினாலும் கிழித்தாலும் காளையரை,
மறத்தமிழன் எனை மனத்தால் ஆளும் வரை,
அவன் பணி செய்தே கிடப்பேன் -
என்னினம் வீழும் வரை
என்று.. சீறுங்கள் காளைகளே!

வாடிவாசல் வழி திறந்து,
விருட்டென சீறிப்பாய்ந்து,
குளம்படிகள் ஆழமாய் பதிந்து,
மச்சக் காளைகளினுள் கலந்து,
திமில் தழுவும் முகங்கள் மறந்து,
கொம்பில் எவனும் சிக்காமல் வளைந்து,
சிமிட்டும் நேரம் முன்னேறிப்பறந்து,
அயர்வற்ற உணர்வுகள் வானுயர்ந்து,
வளர்த்த குடும்பத்தினுள் போய் அணைந்து,
சொந்த பந்தம் அகமகிழ்ந்து,
கண்டிருக்கும் கண் வியந்து,
ஆடிவருமிந்த ஏறைத் தழுவாமல் - இல்லையடா
பொங்கல் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

கோடி கோடியாய் பணம் இறைந்து,
கொத்தாக எங்களினம் மடிந்து,
அயலினம் என் மரபு நுழைந்து,
என் தமிழுக்குத் துரோகம் புரிந்து,
கனவு காணாதே - உனக்காவேன்
நான் விருந்து,
என்று.. சீறுங்கள் காளைகளே!

வருடந்தோறும் சீராட்டிப் பாராட்டி,
பசும்புல் பருத்தித் துவரைப் புகட்டி,
காலாண்டில் சத்துருண்டை ஊட்டி,
அவன் பசித்து என் பசியாற்றி,
என்னுடல் நலம் பேணப் பதறிப் பிதற்றி,
ஊர் உறவு காணாது ஊண் உறக்கமின்றி,
என் திமில் அணைத்த அவன் வெற்றி,
அவன் முத்தமிட்ட என் நெற்றி,
சொல்லுமடா என்னை - எப்படி
வளர்த்தான் போற்றி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

அம்மா என்ற சொல்லை அடிமைச்சொல்லாக்கி,
நீ அம்மா என்றழைப்பதையும் அரசியலாக்கி,
கலைஞரும் கடை நிலையை காசாக்கி,
உரிமைகளை உளுத்த கட்டுமரமாக்கி,
கலகத்தையே கழகங்களின் கொள்கையாக்கி,
தேர்தலில் வன்புணர்ந்து நம்மை விலைமாதராக்கி,
பிணம் தின்னும் - அவல அரசியலை
எறியுங்கள் தூக்கி,
என்று.. சீறுங்கள் காளைகளே!

முந்தா நேற்றைய ஆலம்பாடியனும் காங்கேயனும்,
நேற்றைய புலிகுளத்தானும் உம்பளாச்சேரியனும் ,
இன்றைய பருகூரனும் மலையனும்,
நாளைய அடிமாட்டான் - என்ற
பெயர் பெற்றொழியாமிலிருக்க
என்னினமே தமிழா..
உணவில்லாமல் இறந்தாலும் இற,
உணர்வில்லாமல் இருப்பதை மற!
பொங்கல் வைத்தது விடு,
பொங்கி எழு!
போராட்ட குணம் தவிர,
போர்க்குணமும் கொள்!
என்று..
சீறுங்கள் காளைகளே,
துடி சீவிய கொம்பன்களே!

Sunday, May 3, 2015

குகைமரவாசிகள்

இந்தப் புவியுடன் நம்முயிர் 
எந்திரமாய்ச் சுழல்வது கண்டு,
மீள்வதில்லை நாம் 
அதனுள் சிக்குண்டு!

அறிவோமா எந்நாள் முக்கிய 
மகுடம் சூடப்போகிறதென்று?
அன்றைய நாள் எக்காளமிட்டது 
அம்மகுடம் சூட்டிக்கொண்டு!

வெகுநாட்களுக்குப் பின்  
மேடை நாடகம் காண அழைப்பு!
கலைப்பசியைப் போக்கிக்கொள்ள 
நன்றிக்கு உரித்தான ஓர் அரிய வாய்ப்பு!

"நாடகமா? கடைசியா எப்போப் பாத்தேன்னே தெரியல. நானும் வரேனே", 
மனையாள் கூட்டானாள்!
"நானி, நானி, நானி!", 
அட! என் மகனும்!
"நான் வரலடா!" 
வீண் திரைகள் வீணடித்த நேரம் பயமுறுத்தியதால், 
தந்தை விலகிக்கொண்டார்!

"ஏங்க, சினிமா பாத்து பழகிட்டோம், நாடகம்... நல்லா இருக்குமா?"
"தூரமா ஒக்காந்தா, மொகந்தெரியுமா? பேசறது கேக்குமா?"
"இப்பெல்லாம் நாடகம் பாக்கறாங்களா? எத்தன பேரு வருவாங்க?"
கேள்வி கேட்கும் இலகுவான  
வேலையைச்  செய்து முடித்தாள்!
என்னில் ஓடிய எண்ண 
ஓட்டத்தையே பிரதிபலித்தாள்!
தெரியாத அறிவியலுக்கு கடவுள் தானே விடை,
(ம்ம்... எந்தக் கடவுள் ?!?!?) 
என் குழப்பத்தை மௌனம் என 
நினைத்து அமைதியானாள்!

நாடகங்களின் முதுகில் 
கூனாக திரைப்படங்கள் ஏறியிருந்த நேரம்!
அறிவியல், பொழுதுபோக்கைப் பெட்டிக்குள்ளும், 
மேடைகளை விட்டத்திலும் அடைத்திருந்த சமயம்!

பழங்கலைகளை பட்டியும் மன்றங்களும் 
மட்டுமே உரையாடின!
மீத நாடக சாகசங்களை நெடுந்தொடர்கள் 
மானபங்கம் செய்தன!

"எப்படி இருந்தாலென்ன? இது ஓர் அறிய வாய்ப்பு, 
கலையைத் தொடு, கவலையை விடு!"
கேட்டுரைக்கும் வயதடையா என் மகனிடம் கிசுகிசுத்தேன்!

குகைமரவாசிகள்!
போராலும் பொருளாதாரத்தாலும் புலம் 
பெயர்ந்த அகதிகளை பற்றியதாம்!
அரங்கம் நிறைந்த கரங்களின் கோஷம் 
அறிமுக உரையை முடித்தது!
மேடையில் காட்சிகள் வரிசையில் நின்றேரியது!
நடிகர்கள் நாடகாசிரியரின் எண்ணங்களை 
ஒலியாலும் உடலாலும் பிரதிபலித்தார்கள்!

புரியாத மொழி, புலப்படாத அசைவுகள், உரத்த இசை..
என்னதான் சொல்ல வருகிறார்கள்? புரியவில்லை!
எனக்கு மட்டுமா? இல்லை அனைவருக்குமா? 
என்றறிய நான் மேடை விட்டு, 
அரங்கம் நோக்கிய... அந்தக்கணம்...

"டம்ம்ம்!" இடியை ஒத்த பெரு ஓசை! 
"ஆஆ!” குலை நடுக்கும் கதறல்!
அச்சம் என் கண்களை அவசர கதியில் 
என்னனுமதியின்றி மூடியது!
நிமிடம் கரைந்தது.. அந்தக்  கதறல்? 
அந்தக் கதறல் யாருடையது?
தேட விழித்தேன்!

வெறுமையான இடம், 

பரிச்சயமானவர் எவருமில்லை!
எங்கே சென்றனர் என்னுடன் வந்தவர்? நானெங்கே?
என்ன இது? நான்.. நான்.. நடுவில்,  
குகைமரவாசிகளின் நடுவில்,
உள்ளே... குகைமரத்தினுள்ளே!

மண்ணையும் மனையையும் 

விட்டுத் துரத்தியடிக்கப்பட்டவர்கள்!
உயிருக்காக உணர்வையும், 
பசிக்காகப் பாசத்தையும் தியாகம் செய்தவர்கள்!

அடுத்த வேளைப் 
பட்டினிச்சாவென்று தெரிந்தும்,
அகோரப் பட்டினியில் 
எலும்புகள் உருகுவது உணர்ந்தும்,
கடைசி ரொட்டியைப் பகிர்ந்துண்டனர்,
அதில் எனக்குமொரு பங்கு!

இந்தச் சுயநல இரட்டைச் சமூகம் 

கொடுத்தக் காயத்திலும்,
பொருளில்லாமலும் ஜாதி ஏற்றத்தாழ்விலும்,
அப்பாவி இயற்கையும் உயிர்களும்,
என்னைச் சுற்றி பலியாகின!
அவர்களுடன் நானும் செய்வதறியாது உழல்கையில்,
மூதாதையர் எலும்பு கொண்டு,
அவரவர் குறையும் வலியும் 
போக்க முயன்றாள் தாய் மூதை!
அவர்கள் கரிய உடம்பின் சிவப்பு ஓலங்கள்,
என்னுயிரை நடுக்கியது!
மறுபடி மூடிக்கொண்டன என் கண்கள்..
நிசப்தம்!

அட! இது என்ன? காதலின் ஒலி கேட்கிறதே,

கவிதைகள் உதிர்கிறதே, 
கனவுகள் பறக்கிறதே,
இந்தச் சூழலிலும் இதற்கிடமுண்டோ?
காணக் கண் விழிக்கையில், 
ஒரு புது உயிர் பிறந்திருந்தது!
நான் நேரில் கண்ட முதல் கடவுள் செயல்!

பொருள் விடுத்து மனிதம் உடுத்தும் 

சமூகத்தை உருவாக்கும் கட்டாயக் கடமையைக்  
குருதியில் கொண்ட விதை!
இன்றைய நாகரீகம் விதைக்க மறந்த விதை!
குவா குவா சத்தம் செவியினில் பாய்ந்தது!
மறுபடி நிசப்தம்!

இப்பொழுது உறைத்தது எனக்கு,

குகையின் ஒவ்வொரு சுவடும், 
நாங்கள் விட்டுச் சென்றவையே!
மரத்தின் ஒவ்வொரு அசைவும், 
எங்கள் ஆன்மாவின் மொழியே!
வாசிகளின் ஒவ்வொரு ஓலமும், 
எங்கள் வேதனையே!
அங்கு அரங்கேறிய ஒவ்வொரு காட்சியும், 
எங்கள்  மனசாட்சியே!
குகைமரவாசிகள் வேறு யாருமல்ல, 
எங்களின் எதிர்கால பிம்பங்களே!

பொருளுக்காக மரபையும் பண்பையும் விட்டெரிந்து,

தன்னை மட்டும் கருத்தில் கொண்டு, 
பணக் கூட்டினில் உழன்று,
பகிர்தலும் உத்தம சமுதாய உருவாக்கமும் மறந்து,
நாகரீக முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு, 
வீண் பெருமை பேசி,
இந்தக்  குகைமரவாசத்திற்கு காரணமான எங்களையே, 
அடையாள அட்டை இல்லாமல், 
காட்டிக்கொடுத்து முகமூடி கிழித்திருந்தனர்!
நிசப்தம்!

ஐயோ! அடுத்தென்ன நடக்கப்போகிறதோ?

எங்களின் எந்த முகமூடி கிழிக்கப்படுமோ?
எந்த இரட்டைத்தனம் சுட்டிக்காட்டப்படுமோ?
எங்கள் சமுதாயம் இன்னும் 
என்ன கொடுமைகளுக்கெல்லாம் காரணமாகுமோ?
பயத்தில் அருகிலிருந்த ஒரு 
பொம்மையைக் கட்டிக்கொண்டேன்!

குகை மரத்தின்  உன்னதத்தை 

வெகு ஜனனம் கொண்டு செல்ல,
நிலை மாறும் மனிதன் போதாது,
நிலை மாறா பொம்மை தான் உதவுமென்று, 
நான் கட்டியிருந்த பொம்மையிடம், 
வழிகளை வாசிகள் போதித்து முடித்த போது,
வெட்கிக் குனிந்திருந்தது என் தலை!
வெறுப்பால் மூடியிருந்தன என் கண்கள்,
முற்றும் இழந்திருந்தேன் என்நிலை!
நிசப்தம்!

அலையென இரைந்த அவ்வோசை, 
என்னிலை உணர்த்தியது!
அதுவே என்னை 
குகைமரத்திலிருந்து விடுவித்தது!
என் இருக்கையில்தான் இறுக்கமாக இருக்கிறேன் 
என்பதை உணர்த்தியது!
அந்தக் கரவோசையில் அரங்கம் அதிர்ந்தது, 
அனைவரும் தெரிந்தனர்!

அப்பாடா.. நிம்மதி! அத்தனையும் பிரம்மையே!
நிமிடங்கள் கரைந்தன..
எங்கே குகைமரவாசிகள்? 
சட்டென மேடை நோக்கினேன்,
குகைமரவாசிகள் வரிசையில் அரங்கத்தை 
வணங்கிக் கொண்டிருந்தனர்!
ஒரு வாசி மட்டும் என்னை ஓரக்கண்ணில் பார்த்து 
விஷமப்புன்னகை புரிந்தான்!
அவன் கையில் என் சட்டையணிந்த
போதனை தாங்கிய பொம்மை!

மிரட்சியுடன் என் கரம் எழுப்பிய கோஷம் 
அரங்கத்தில் மறைந்தது!
கனத்த மனதுடன் என்னுடல் மட்டும் 
நிஜவுலகை தரிசித்தது!

குகைமரத்திலிருந்து விடுபட்டு மாதங்களாகியும்,
அழியவில்லை அவர்கள் வரைந்த ஓவியம்!
அழியாது வாழும் பல காலம் இக்காவியம்!

இப்படியொரு உலகத்தரம் நாடகங்களில் இன்றும் சாத்தியமே. பணமும் பகட்டும் இல்லாமலே ரசிகர்களுள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்று உணர்த்திய நாடகாசிரியர்  "திரு. முருக பூபதி" அவர்களுக்கும், இந்த உன்னத அனுபவத்தை கொடுத்த மணல் மகுடி நாடகக்குழுவினருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

Tuesday, September 30, 2014

எங்கள் தங்கராஜா

"எங்கள் பள்ளிகளில், உங்கள் குழந்தைகளை அனுமதியுங்கள்...!!"
பள்ளி விளம்பரங்கள்
பெற்றோரிடமும், பிரம்மச்சாரிகளிடமும்
பாரபட்சமின்றி வீதியெல்லாம் கெஞ்சிக்கொண்டிருந்தன!

"பண்டிகையப்ப, ஊருப்பட்ட விலை சொல்லுவாங்க, இப்பவே சுண்டல், பொறி, பூ எல்லாம் வாங்கிடலாம் புள்ள...!!"
தீவிர திட்டம் தீட்டின
நடுத்தரக் குடும்பங்கள்!

"ஒரு சல்லை, 40 ரூவா. 2 மொழம் பூ 50 ரூவா. ஒரு பக்கா பொறி 30 ரூவா...!!" 
வாகன இரைச்சலையும்,
ச்சோவெனக் கொட்டிய மழையையும் தாண்டி
மக்களை ஈர்த்தது விற்பவனின் குரல்!

"வண்டிய கழுவி பூஜை  போடனும், ஊருப்பட்ட வேலை இருக்கு, சீக்கிரம் பூஜை பொருள கட்டுப்பா...!!"
லட்சுமி சரஸ்வதி தெய்வங்களோடு சேர்ந்து,
வாழ்வோடு ஒன்றிப்போன ஆயுதங்களும் உயிர்தெழத் தயாராகின!

விடிந்தால்
தசமி விஜயம்!
விழாக்கோலம் பூண்டிருந்தது
கோவை நகரம்!

ஆனால்! எங்களுக்கு மட்டும்,
அப்பண்டிகை விடியல்
இருளாகவே நிலைத்து விட்டது!
எங்கள் குடும்பத்தாருக்கு,
வெளிச்சமெல்லாம் கருமையாகவே தோன்றியது!
தினமுதிக்கும் சூரியனும்,
எங்களிடம் தோற்றோடினான்!
மழை வானிருந்து மட்டுமல்ல,
எங்கள் கண்களிலும் பெய்தது!
வெளியில் மட்டுமல்ல,
வீட்டினுள்ளும் கொட்டியது!

ஆம்! என் அன்பு மாமா
உறங்கிக்கொண்டிருந்தார்...
நிரந்தரமாக!

என் மழலையைத்
தோளில் சுமந்தவரை,
ரத்தச் சொந்தமில்லை என்றாலும்,
என் அத்தைச் சொந்தத்தை பூரனமாக்கியவரை!
என்னரும்புக் குரும்பைத்
தள்ளி நின்று ரசித்தவரை,
என் குழந்தைக் காலம்
நினைவூட்டிச் சிலாகித்தவரை,
என் மகனின் நடையை
விரல் பிடித்து இன்புற்றவரை,
அரசியலுடன் ஆன்மீகமும்,
பகுத்தறிவுடன் தேசப்பற்றும் கொண்டவரை,
மனதார ஊக்குவித்து மகிழ்பவரை,
சாதனை வெறியும் அதிசய தைரியமும்
மேலோங்கி நின்றவரை,
என் நகைக்குச் சுவை கூட்டியவரை,
நித்திரையின் ரகசியம் போதித்த யோகா குருவை,
உயிர் நண்பனொருவனை எனக்கு வரமளித்தவரை,
...மார்பில் குத்தினேன்!

ஆம்! என்னால் இயன்றவரை,
வலிக்குமோ என்று
ஒரு நொடி சிந்திக்காமல்,
இரக்கமற்று இரு கைகளாலும் குத்தினேன்!

எங்கள் நாட்டில் பிரசவம் பார்க்கும்
மருத்துவச்சி சாலைகள்,
நிஜ மருத்துவர்கள் கைவிட்ட பிறகும்,
என்னுடன் இணைந்து என் மாமன் இதயம்
மறுபடி துடிக்கச்செய்து விடாதா என்ற பேராசையில்,
நானிருந்த அவசர ஊர்தியின் வேகத்தில்,
கண்ணீருடன் கதறிக்கொண்டே,
மீண்டும் மீண்டும் குத்தினேன்!

எதுவும் உரைக்கவில்லை அவருக்கு,
எந்தச் சலனமுமில்லை அவரிடம்,
ஒரு பலனுமில்லை இறுதியில்!

அவரின் மெய் பொய்யாய்ப் போயிருந்தது!
பாவம் வாழ்க்கை அவருக்கு தந்த மரண அடி,
என்னுடைய உயிரடியை விடப் பலமானது போலும்!
ஓரம் நின்று அவர் ஆத்மா
என் அறியாமையைப் பார்த்துச்
சிரித்துக்கொண்டிருந்தது!

ஆம்! உறங்கித்தான் போய் விட்டார்
நிரந்தரமாக,
உறுதி வேறு செய்தார்கள்
அனைவரும்!

இல்லை எனக்கு உடன்பாடில்லை!
எங்களில் அவர் நினைவுகள் இல்லையா?
அவர் வித்துக்களில் உயிர் இல்லையா?
அவர் உருவம் மறந்து விடுமா?
இல்லை பாசம் தான் மரத்து விடுமா?

உடல் துறந்த அவர் ஆத்மா
உயிர்த்திருக்கும்!
உயிர்த்திருக்கும் அந்த ஆத்மா
மறுபடி உருவெடுக்கும்!

அந்நாள் வெகு தூரமில்லை,
இன்னும் எட்டு  மாதங்களே!
ராஜனோ ராணியோ
இவ்வுலகில் பிறப்பெடுக்கும்!
அது தங்கராஜனின் மரபைக் கொண்டிருக்கும்,
அன்று அனைவருக்கும் அது
உண்மை உணர்த்தி இருக்கும்!
நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர் என்று!

அதுவே இந்நீடித்த இரவைத் தோற்கடிக்கும்,
விடியலை நிரந்தரமாக்கும்!
இனி இருளும் தோற்றோடும்,
உங்கள் மரபு செழித்தோங்கும்!
அது கண்டு உங்கள் ஆன்மா,
மகிழ்வுணர்வில் குளித்து,
பெருமிதத்தில் திளைத்து,
சாந்தி அடையட்டும்!
சாந்தி அடையட்டும்!

Monday, June 9, 2014

அதிரதன் (எ) அதிரத்

தமிழும் இலக்கியமும் இளவரசிகளாய் வலம் வர,
முப்பெரும் தேவியராம்..
    சரஸ்வதியின் அன்பும்,
    லட்சுமியின் பண்பும்,
    ஈசுவரத்தின் தாண்டவமும்,
பத்மநாக விக்னேசனருளும் 
அதீதமாய் ரட்சித்திருக்க!
கறியை உண்டுக் காலனை வென்று,
ரவியினொளி சௌந்தரமாய் ஜெகமெங்கும் 
சிந்துவாய்ப் பாய்ந்தோடி,
குமரனும் நடராசனும் மித்திரர்களாய்ப் 
பன்னீரில் கலந்தாடி!
சென்னியான மசினியின் வேர்களுக்கு,
ஜீவனை வார்த்து!
ரங்கராஜாமனிகளுக்கு மலர்கள் தூவி,
பாரதியின் திலீபமெனும் தீ 
அசோகமாய் வளர்ந்திருக்க,
தர்மமெனும் தங்கராஜனுக்குச் சரணடைந்து,
கனகமும் மல்லியும் குருதியில் கலந்தாடி, 
சூரி போல் கூறிய நெறியோடும், 
வினோதமான அன்போடும், 
தரணி ஆளும் திறனோடும்,
மாசில்லா முத்துக்களான 
மகிழக்குஞ்சுகளை ஈன்றெடுத்த,
மோகனச் செல்விகளும் பிரிய வேலன்களும் 
வசந்தத்தில் மலர்ந்திருக்கும்,
அகரக்குடும்பத்தின் ரத்தினத்திலகமான பிரதீபனே!
என் தங்கைத் தமிழின் மகனே! 
என் மருமகன் அதிரதனே!

எங்கள் குடும்பப் பயணத்தை,
பயணமென்ற குருக்ஷேத்ரத்தைத்
தோள் கொடுத்து நடத்த வந்தவனே!


சோழன், சக்கரவர்த்தி மற்றும் 
திலீபர்கள் உண்டென்றாலும்,
கிழக்கின் மத்தியில் உதித்து, 
எங்கள் சேனைக்கு வலு சேர்க்கப் பிறந்தவனே!

அதிரதன் - பல 
ஆயிரம் பேருடன் 
தனித்தே சமர் செய்பவனாம் -அஸ்திரங்கள் 
பல உடையவனாம் - அதிரடிகள் 
பல புரிபவனாம் - சிறந்த 
தேரோட்டியாம் - மிகச்சிறந்த வழிகாட்டியாம்!

அவசியமான பெயர் தானடா உனக்கு -உன் 
பெயரே வாழ்வின் பாதையாகட்டும் - மேன்மையே 
உன் நோக்கமாகட்டும் - உன் வாழ்வே 
காவியமாகட்டும்!

தேடிப் பகை நித்தம் கொண்டு - பல 
வீண் சொல்லுரைத்து - அகங்கார 
முடி சூடி, பிரித்தாளும் வழி தேடி - வயதோடு 
அனுபவத்தை எட்டித்தள்ளி - அடக்குமுறைக்கும் 
அக்கறைக்கும், அதோடு 
பயத்துக்கும் மரியாதைக்கும்
வேறுபாடு அறியாது - வஞ்சத்தில் 
வீழ்ந்து, பாச நேசம் விடுத்து - தன் 
மெய் நாளையே பொய் என்றறியாமல்
மாயத்தில் உழன்று - வேதனையைப்  
பரிசளிக்கும் இவ்வுலகத் 
துரியோதனன்களை வென்று..

அன்பிற்கே சரண்,
உத்தமர்களுக்கே மித்திரன், 
தர்மத்திற்கே ரதன்,
என்ற கொள்கை சூடி,
அதிரதனாய் உன்னை விதைத்து, 
மகாரதனாய் வாழ்ந்து,
ஜெய பேரிகை முழக்கு,
இவ்வுலகை ஒரு கலக்கு, கலக்கு!