Friday, October 10, 2025

பிறந்த நாள்

வயதைக் குறைத்துரைக்கும்     
ஒற்றை நாடி உடம்புடையாள்,
ரங்கனுக்கும் ராசாமணிக்கும் 
மகளாகிப் போயிருந்தாள்,
பட்டிக்காட்டுக் கட்டுப்பாட்டிலும் 
எட்டாம் வகுப்பு படித்திருந்த
சரசுவதி தேவியவள்,
ஓங்கிப் பேசிவிட்டால் 
ஓரக்கண்ணில் நீர் வடிப்பாள்,
அவமானங்கள் அத்தனையும் 
அன்புக்காக அரவணைப்பாள்,
ஆதங்கங்கள் நிறைய உண்டு - ஆனால்  
அறம் மட்டும் தவறியதில்லை,
அதிர்ந்தும் பேசுவதில்லை,
வாழ்க்கை என்னவென்று 
வழக்காடும் விருப்பமில்லை - ஆனால் 
வாங்கி வந்த அத்தனையும் 
வங்கிபோலக் காத்திடுவாள்,
பேரன் பேத்தி வந்துவிட்டால் 
துள்ளித் திரிந்திடுவாள்
துடியாட்டம் போட்டிடுவாள்,
பசியறிந்து உணவளிப்பாள் 
பாசத்துடன் விருந்தளிப்பாள் - என்னப்பன் 
குமரேசனின் குலசாமி
எனக்கும் அப்படியே, 
தன்னுடைய  சாயலை
எங்களுக்கும் அப்பிவிட்டு 
அரவணைத்துக் காத்திட்ட 
அவள்...
என் தாயாகப்  
பிறந்த தினம்!