Friday, October 10, 2025

பிறந்த நாள்

வயதைக் குறைத்துரைக்கும்     
ஒற்றை நாடி உடம்புடையாள்,
ரங்கனுக்கும் ராசாமணிக்கும் 
மகளாகிப் போயிருந்தாள்,
பட்டிக்காட்டுக் கட்டுப்பாட்டிலும் 
எட்டாம் வகுப்பு படித்திருந்த
சரசுவதி தேவியவள்,
ஓங்கிப் பேசிவிட்டால் 
ஓரக்கண்ணில் நீர் வடிப்பாள்,
அவமானங்கள் அத்தனையும் 
அன்புக்காக அரவணைப்பாள்,
ஆதங்கங்கள் நிறைய உண்டு - ஆனால்  
அறம் மட்டும் தவறியதில்லை,
அதிர்ந்தும் பேசுவதில்லை,
வாழ்க்கை என்னவென்று 
வழக்காடும் விருப்பமில்லை - ஆனால் 
வாங்கி வந்த அத்தனையும் 
வங்கிபோலக் காத்திடுவாள்,
பேரன் பேத்தி வந்துவிட்டால் 
துள்ளித் திரிந்திடுவாள்
துடியாட்டம் போட்டிடுவாள்,
பசியறிந்து உணவளிப்பாள் 
பாசத்துடன் விருந்தளிப்பாள் - என்னப்பன் 
குமரேசனின் குலசாமி
எனக்கும் அப்படியே, 
தன்னுடைய  சாயலை
எங்களுக்கும் அப்பிவிட்டு 
அரவணைத்துக் காத்திட்ட 
அவள்...
என் தாயாகப்  
பிறந்த தினம்!

Monday, September 22, 2025

முத்தம்

என்னை மறக்கிறேன்,
எளிதாய்ப் பறக்கிறேன்,
ஏழுலகம் சென்றுவிட்டு 
எள்ளி நகைக்கிறேன்,
தத்தித் தடுமாறித் 
தகுதி இழக்கிறேன்,
தயங்கித் தயங்கித் 
தயக்கம் தொலைக்கிறேன்,
தவறிச் செய்துவிட்டத் 
தவறை மறைக்கிறேன், 
இனிப்பைப் பருகிவிட்டு
இறப்பைத் தவிர்க்கிறேன்,
இன்னும் கொஞ்சம் - எனக் 
கெஞ்சிக் கேட்கிறேன்,
வசமாய்க் கவ்விக்கொண்டே 
வாழத் துடிக்கிறேன் - அவள்
மூச்சை இழுத்துக்கொண்டு 
மூர்ச்சையாகிறேன்,
மூடாத அதரங்களில்
முடிவைத் தேடுகிறேன்,
களவாட வந்துவிட்டு 
கலந்து துடிக்கிறேன்,
காலத்தின் விளையாட்டை  
கடித்துக் களிக்கிறேன்,
காதல் தலைக்கேறி 
காமம் தரிக்கிறேன் - பின்
கரணம் அடிக்கிறேன்,
மென்மையின் மயக்கத்தில்
மதியைத் தொலைக்கிறேன் - அவள்
நாவே பனியென்று  
நம்பித் தொலைக்கிறேன் - குளிரை 
உறிஞ்சிக்கொண்டு 
உச்சம் அடைகிறேன்,
உச்சங்கள் சென்றுவிட்டு  
உணர்வை இழக்கிறேன்,
சொர்க்கம் இதுதானென்று 
சொக்கிப் போகிறேன்,
போதி மரத்தடி நின்று
போதாதென்கிறேன்,
முடிவுரை வேண்டாமென்று 
முகவரியைத் தொலைக்கிறேன்,
கொண்டவள் கொடுக்கிறாள்
கொத்திக் கொள்கிறேன்,  
இப்படியே விட்டுவிடுங்கள் - எனை
இப்படியே விட்டுவிடுங்கள்
அவள்
இதழ்களைச் சுவைத்துக்கொண்டே
இச்சென்மம் கடக்கிறேன்!

Thursday, August 14, 2025

கந்தசாமி

நிமிர்ந்த நடை நடந்து
நிற்காமல் உழைத்திடுவான்,
நாமறிந்த செய்திகள் - இவன் 
செவி சென்று வந்தவையே,
கடமையைக் கருத்தாகச் 
செய்திடுவான் - பிணியைக் 
கண் விழித்து விரட்டிடுவான்!


அவதிப் படுவோரின்
ஆபத்பாந்தவன்,
சேகுவாராவின் சகோதரன்,
பெரியாரின் பேரன்,
பகுத்தறிவைப் பேசிவிட்டுப் 
பசப்புகளை உடைத்திடுவான்,
சிகிச்சையென்று வந்துவிட்டால்
சிரத்தையோடு செய்திடுவான்,
சமூக நீதியின் சத்தம் - அவன் 
சபை எங்கும் ஒலித்திருக்கும் - ஆம்
அறுவை சிகிச்சையில் - அவனுக்கு
அனைவரும் சமமே!

அவன் முகம் கண்டவுடன்   
கவலைகள் கலைந்தோடும்,
உறுதியான கை பட்டு - உன் 
உள்ளுறுப்பு உறுதி பெறும்,
ஆரோக்கியம் மட்டுமல்ல
அறமும் பழகிடுவான்,
மருத்துவத்தால் மட்டுமல்ல 
மதியாலும் விதி செய்வான்!

நரிகள் ஆடும் ஆட்டம் - அவன்
நாடியிலே ஒட்டவில்லை,
கோடிட்டு வாழ்பவன்
கோடிகளுக்கு ஆசையில்லை - அவன் 
அன்புக்கு அளவுண்டு - ஆனால்
அக்கறைக்கு அளவே இல்லை,
பிணியோடு வந்தோரின் 
பிறவிதனைப் பேணிக் காக்கப்  
பிறப்பெடுத்து வந்த சாமி,

எங்கள் 
கந்தசாமி!

Monday, July 7, 2025

புத்தன்

அழகிதான் அவள்,
ஆறு வயதிருக்கும்,
அழுக்குச் சட்டை,
ஆறாத நடை,
ஆதரவு யாருமில்லை
ஆற்றுவார் எவருமில்லை - ஆனாலும்
அவள் அழகிதான்,
இடுங்கிய கண்களிலே  
ஈரத்தின் தடயம், 
பரட்டைத் தலையுடன் 
பாலை வயிற்றுடன்,
வெட்ட வெளியினிலே 
வெய்யிலின் வெக்கையிலே - அவள் 
மயக்கத்தின் விளிம்பில்,
மழலையோ 
மயங்கிய நிலையில்,
மகிழ்ச்சியல்ல 
மதிய உணவே இலக்கு,
நாளையல்ல - ரூபாய்
நாற்பதுதான் கணக்கு,
கூட்டத்தி்ல் தொலைந்து,
கூவிக் கூவிக் கரைந்து,
பேரம் கேட்டுப் பயந்து 
பேசிப் பேசிக் கவர்ந்து,
புத்தகம் ஒன்றை விற்றுவிட்டு,  
புள்ளினமாய் ஓடிச்சென்று
புளிச்சோற்றைத் தின்றுவிட்டு 
மீண்டும்
மக்களோடு மறைந்துவிட்ட - அந்த
மழலையின் கதறல்...
என்னைப்  
புத்தனாக்குமா?

Monday, May 5, 2025

இசை

அழவைக்கும் அழகூட்டும்,
உணர்வூட்டும் உயிரூட்டும் 
உச்சி முகர்ந்து 
உறங்க வைக்கும்,
உறங்காமல் 
விழிக்க வைக்கும்,
கலங்கடிக்கும்
கட்டியும் அணைக்கும்,
காலத்தைச் சுருக்கிவிட்டுக் 
கடந்தவற்றை நினைவூட்டும்,
நினைவுகளை நீட்டிவிட்டு
நீண்ட தூரம் கூட வரும்,
சுருக்கமாகச் சுகமளித்து
சுதந்திரத்தின் அடிமையாக்கும்,
மண் வாசனையில் 
மயங்க வைக்கும்,
மதியை மறக்கடிக்கும்,
கள்ளுண்ணாமலே  
போதை தரும்,
கலவியின்றி 
உச்சமும்  தரும்,
காதலையோ கொண்டாடும் - ஆனால்
காற்றின் வழி வந்து 
காலத்திற்கும் கூட வந்து 
உயிரினிலே கலந்தாலும்
புரிவதேயில்லை... 
இசை!

Sunday, May 4, 2025

பிரிவு

விடுமுறையில் 
நீ தாய் வீட்டில்,
விடுதலையில் 
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா  இத்தனிமை 
சிறப்புதான்  என்றாலும் 
சீமாட்டி நீ இல்லாமல் 
சிகரம் தொட்டு 
என்ன பயன் - என 
தாய் வீடு 
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து  
நிர்க்கதியாய்  நின்றிருந்த 
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ 
சென்றாலும் 
தொலையாத 
உன் நினைவை - என் 
வீடெங்கும் ஒலித்திருக்கும்  
உன்  கொலுசொலி 
சொல்லியது, 
இந்தத் 
தற்காலிகப் 
பிரிவு கூட - ஒரு
தரமான 
காதல் தான்!

Wednesday, April 30, 2025

நேர்மை

ரயிலுக்குச்  
சீட்டு எடுத்துவிட்டு,
ரசீதையும் வாங்கிவிட்டு, 
மீதச் சில்லறையை 
எண்ணிவிட்டு, 
மிக அதிகம் 
இருப்பதை - ஒருவன் 
அரசிடமே 
திருப்பிக் கொடுத்தால், 
அங்கே தான் 
அருகில்  
எங்கோ இருக்கிறான் 
என் அப்பன் 
குமரேசன்!